VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Friday 12 December 2014

வேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.

வேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை.

இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற்றி அக்னி சாட்சியாகச் செய்யப்படுவதாகும். இவற்றிற்கு பொதுவான காலங்களூம், குறிப்பிட்ட முகூர்த்தகாலங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன.
பொதுவாக அனைத்து வழிபாடுகளும் பகலில் சூரிய உதயத்திலிருந்து, நடுப்பகலிற்குள் செய்யப்படவேண்டும். இது பொதுவிதியாகும்( உண்மையில் பிரம்ம முகூர்த்தம் என்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் செய்யப் படும் சடங்குகள் முகூர்த்த சாத்திரத்தில் கூறப்படவில்லை.). வேதகாலத்தைப் பொறுத்தவரை பகலிலேயே சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடக்கத்தில் திதியை (திதி என்பதே தற்காலத்தில் தேதி என்று மாறியுள்ளது.) கொண்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன. பின்னர் கால வளர்ச்சியினால் முகூர்த்தங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக சடங்குகள்,வழிபாடுகள் நிறை வேற்றப்பட்டன.
வேதகால முகூர்த்தப் பெயர்கள்:

பகலிறவு கொண்ட ஒரு நாளுக்கு முப்பது முகூர்த்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. இவற்றில் வளர்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும், தேய்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும் முகூர்த்தங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

வளர்பிறை முகூர்த்தப் பெயர்கள்      தேய்பிறை முகூர்த்தப்பெயர்கள்
பகல் --------        இரவு                      பகல் ----------- இரவு             
சித்ர             தாதா                 சவிதா             அபிசாஸ்தா
ஹேது           ப்ரதாதா              ப்ரசவிதா           அனுமந்தா
பிரபான்          அனந்த               தீப்த               அனந்த
அபான்             மோத                திபயன்             மோத
ஸம்பான்           ப்ரமோத             திப்யமான          ப்ரமோத
ஜ்யோதிஸ்மான்    அவெஸன்           ஜ்வலன்           அஸாதயன்
தேஜஸ்வான்       நிவெஸயன்         ஜ்வலிதா           நிசாதயன்
அதபான்            ஸம்வெஸன்        தபான்            ஸம்ஸாதன்
தபான்              ஸம்ஸன்தா        விதபன்           ஸம்ஸன்னா
நபிதபான்           ஸன்தா             ஸன்தபன்          ஸன்னா
ரோகன             அபவன்              ரோகன            அபூ
ரோகமான          பிரபவன்            ரோகமான           விபூ
சோபன            ஸம்பவன்           ஸம்பூ               ப்ரபூ
சோபமான         ஸம்பூத              சும்பமான           ஸம்பூ
கல்யாண          பூத                  வாம                புவ.

 ஆகியவை வேதகால முகூர்த்தப் பெயர்களாகும்.

வேத காலத்தில் இராசிகள், பாவகங்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆதலால் ஒரு நாளினை முப்பது பிரிவாக பிரித்து காலத்தை கணித்துள்ளனர். தற்பொழுது கணிக்கப்படும் நாழிகை, மணிகள் எல்லாம் அப்பொழுது இல்லை. அப்பொழுது காலத்தைகுறிக்கும் சொல்லாக முகூர்த்தம் என்றுள்ளது. இவற்றில் நல்லமுகூர்த்தகாலமென்றும் ,தீய முகூர்த்தகாலமென்றும் பிரித்து பார்த்து செயல்களைச் செய்துள்ளனர். 

தற்காலக் கணிதப்படி வேதகால முகூர்த்த காலத்தின் அளவு நாற்பத்துயெட்டு நிமிடங்களாகும்.(இரண்டு நாழிகைகளாகும்.) மேலே குறிப்பிடப்பட்டுள்ள முப்பது முகூர்த்தப்பெயர்களில் நல்ல முகூர்த்தங்களும், தீய முகூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த முகூர்த்தம் பார்க்கும் அமைப்பு வேதகாலத்திற்குப் பின்னர், இதிகாசம்,புராணகாலம்,கிருஹ்ய ஸூத்ரகாலங்களிலும், மனு ஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி காலங்களிலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. பின்னர் இராசிகளும்,பாவகங்களும் கண்டுபிடிக்கப்பட்டபின், இப்பெயருடன் கூடிய முகூர்த்த காலங்கள் கைவிடப்பட்டன.

தற்கால முகூர்த்தங்கள்

தற்கால முகூர்த்தம் என்பது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வளர்ச்சியாகும். முகூர்த்தவிதிகளில் கூறப்பட்டுள்ளபடி ஒரு நல்ல காலத்தை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அரிதானதாகும். எண்ணிலடங்காத முகூர்த்த விதிகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டால் பல நூல்கள் எழுத வேண்டியது இருக்கும். இருப்பினும் முகூர்த்த விதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய சில காரணிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

திதி. நட்சத்திரம், வாரம், யோகம்,கரணம்,அமிர்தாதி யோகங்கள்,இலக்னம், பாவகம்,கோள்கள்நிலை,தியாஜ்யங்கள்,நேத்திரம்,ஜீவன்,வாரசூலை,யொகினி, தனியநாள்,கரிநாள்,இலத்தை,திரிதினஸ்பிர்க்கு,அவமாகம்,மேல்நோக்குநாட்கள்.கீழ்நோக்கு நாட்கள்,சம நோக்குநாட்கள்,இராகுகாலம்,எமகண்டம், கௌரி பஞ்சாங்கம்,பஞ்சகம்,போன்றவை தற்போது பயன்படுத்துவதாகும். 

பயன்படுத்தாத முகூர்த்தவிதிகள் நூற்றுக்கணக்கில் நூல்களில் உள்ளன.அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு முகூர்த்த நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது இயலாத செயலாகும்.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட விதிகளில் முதன்மையானவற்றை தேர்ந்தெடுத்து செயல்களைச் செய்யலாம்.

முகூர்த்தநேரம் என்பது குறிப்பிட்ட செயலிற்கு இடையூறு வருவதை தடுக்குமே தவிர, செயலின் எதிர்காலத்தன்மையை வெளிப்படுத்தாது.

அனைத்து எதிர்காலப் பலன்களும் அவரவரின் சாதகப்படியே நடைபெரும்.              

மிக்க நன்றி.

Professor. Dr.T.Vimalan.   12-12-2014.


Friday 5 December 2014

தமிழகப் பல்கலைக் கழகங்களில் சோதிடவியல் துறை. சிறு விளக்கம்.

அன்புடையீர் வணக்கம். திரும்பவும் உங்கள் அனைவரையும்  சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
 தமிழகப் பல்கலைக் கழக சோதிடவியல் துறை  வரலாறு என்பது கி.பி 2002 ல் இருந்து தொடங்குகிறது. கி.பி.2001ல் இந்திய வரலாற்றில் சோதிடத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக்குழு ஒரு சிறப்பான முடிவைஎடுத்தது. என்னவெனில் இந்தியப் பல்கலை கழகங்களில் சோதிடவியல்பாடமாக வைக்கப்பட்டு சோதிடவியல்துறை தொடங்க ஆணையிடப்பட்டது. பதினாறு பல்கலைக்கழகங்களுக்கு மானியமாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்சம்) வழங்கப் பட்டது. ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அவர்களுக்குரிய சம்பளம் பல்கலைக்கழக மானியக்குழுவே கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்கியது என்பது எனக்குத்தெரிந்த தகவலாகும். ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.மற்றொன்று தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக் கழகமாகும். 
இவற்றில் தஞ்சை ஸாஸ்த்ராப் பல்கலைக் கழகமே சோதிடவியல் துறையைத் தொடங்கியது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தனக்கு சோதிடவியல் துறைத் தேவையில்லை என்று மானியக்குழு கொடுத்த பணத்தை திருப்பியனுப்பியதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

கி.பி 2002ல் தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்புமிகு. ரா. சேதுராமன் அவர்களின் ஆணைப்படி சோதிடவியல் துறைக்கு திரு தி. விமலனாகிய எனக்கு விரிவுரையாளர் பதவி கொடுத்து பாடப்பிரிவுகளைத் தொடங்கச் செய்தார். அந்த நாள் தமிழக சோதிடவியல்துறை வரலாற்றிலும் எனது வாழ்விலும் அழியாத புகழை ஏற்படுத்தியதாகும். சோதிடவியல் துறையின் முதன் முதலில் ஊழியம் பெற்றவனாக பாக்கியம் பெற்றேன். அங்குதான் உலகத்திலேயே மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. அதை நடத்துவதற்கு வாய்ப்பளித்த ஸாஸ்த்ராப் பல்கலைக்கழகத்தினர்க்கு என்றென்றும் நன்றியுடையவனாவேன்.

இதே 2002ல் ஆந்திரா பொட்டி ஸிரி ராமுழு பல்கலைக் கழகத்தில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.

2007ல் தஞ்சை சாஸ்த்ராப்பல்கலையில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவும் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் 2009ல் கோவை கற்பகம் பல்கலைக் கழகத்திற்கு சோதிடவியல் துறையை ஏற்படுத்தி முதன் முதலில் அறிவியல் ரீதியான பட்டப்படிப்புகளை தொடங்கினேன். கற்பகம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் மாண்புமிகு டாக்டர். வசந்த குமார் ஐய்யாவின் உத்தரவின் பெயரில் எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. Diploma, B.A., B.Sc., M.A., M.Sc. ,M.Phil., Ph.D. போன்ற அனைத்து பாடப்பிரிவுகளிலும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இச்சோதிடவியல் துறைக்கு பேராசிரியராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் செயலாற்ற வாய்ப்பளித்த கற்பகம் பல்கலைக் கழகத்தினர்க்கு நன்றி உடையவனாகிறேன்.

ஏறத்தாழ 5000 நபர்கள் இதுவரை பட்டம் பெற்றிருப்பார்கள். இவை தவிர மற்ற பல்கலையில் எவ்வாறு சோதிடவியல்துறை இயங்குகிறது என்று எனக்கு தெரியவில்லை. இதுவே சோதிடவியல் துறையின் சுருக்கமான வரலாறாகும்.


( ஒரு சிலர் மதுரை காமராசர் பல்கலையில் சோதிடவியல் துறை இருந்ததாக கூறுவதாக கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் ஒரு அதிர்ஸ்டம் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. அங்கு சோதிடவியல் துறையும் இல்லை.  சோதிடவியல் பேராசிரியர் என்று எவரும் இருந்ததில்லை. அங்கு இருந்தது சாதாரண டிப்ளமோ பாடப்பிரிவு ஆகும். அதுவும் தொலை நிலைக்கல்வியில் ஓராண்டு படிப்பாகும்.  தமிழகத்தில் உள்ள 20 நபர்கள் இப்பாடப்பிரிவை நடத்தியுள்ளனர். அதில் நானும் ஒருவனாவேன். எங்கள் அனைவருக்கும் பத்துமணி நேர வகுப்பிற்குரிய பணம் மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு எங்களுக்கும் பல்கலைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எங்களைப்போலவே பல்கலையில் வெவ்வேறு துறையில் பணி செய்த ஊழியர்களும் பாடம் எடுத்துள்ளனர். நான் 1993/1994ல் டிப்ளோமோ படிப்பிற்கு தேர்வு எழுதத்தான் சென்றேன். ஏனெனில் மூன்று பாடங்களும் அடிப்படை சார்ந்ததாகும். வேறு எவரையும் அப்பொழுது தெரியாது. பின்னர் 1996ல் இப்பாடப்பிரிவை சோதிடம் தெரிந்தவர்கள் பாடம் எடுக்கலாம் என்று அறிந்து வாய்ப்பு கேட்பதற்கு சென்றேன்.
 அப்பொழுது அங்கு பல்கலை அலுவலராகப் பணியாற்றிய திரு. மாரிமுத்து( Non-Teaching staff) என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டபொழுது வடமொழித்துறை பேராசிரியர் டாக்டர், வீர ராகவன் அவர்களை பார்க்கச்சொன்னார். திருவீரராகவன் அவர்களைப் பார்த்தபின்னரே பல செய்திகள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. 
முதலில் சோதிடவியல் துறை என்று ஒன்று இல்லை என்பது புரிந்தது. பின்னர் பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டேன். இதை பெருமையாகக் கூற முடியவில்லை. ஏனெனில் வெறும் டிப்ளோமோ பாடத்திட்டத்தை எந்த பிரிவிலும் தொடங்கலாம் என்றும் அதற்கு துறை என்று ஒன்று தேவையில்லை என்பதும் அறிந்து கொண்டேன். இப்பாடத்தைப் படிப்பதால் எதிர்காலத்தில் என்ன பயன் ஏற்படப்போகிறது என்ற ஐயமும் இருந்தது. சோதிடவியல் படிப்பதற்கு மாணவர்கள் அதிகம் வந்தாலும், எங்களை, மற்ற துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்கள் கொடுக்கும் பணம் பற்றாக்குறை தான் இருப்பினும் பாடம் எடுத்தோம் . 
மொத்தம் ஐந்து ஊர்கள், ஒரு ஊருக்கு மூன்று சனி,ஞாயிறு. ஆக ஒரு ஆண்டிற்கு  ஐந்து ஊர்களில் 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் எடுப்போம். மற்ற நாட்களில் எங்களது வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். மற்ற செய்திகள் பதிய முடியவில்லை. நன்றி.) நிறையக் கூறலாம். தேவையில்லை என்று முடிக்கிறேன்.

குறிப்பு: எனது மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். உங்களைப் பற்றியும் உங்கள் திறமைகளைப்பற்றியும் மற்றவர்களைவிட எனக்கு நன்கு தெரியும். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். எனது பணியை நான் செய்கிறேன். நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஒரு சிறு பகுதியை பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் சோதிடம் என்ற கடல் குப்பைகளால் சூழப்பட்டு மக்களை ஏமாற்றும் கலையாகமாறி வருகிறது. அதில் கொஞ்சமேனும் வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னால் முடிந்த அளவிற்கு சாதித்துள்ளேன். இனியும் சாதிப்பேன். உங்களால் முடிந்ததை சாதித்துக்கொள்ளுங்கள். ஒரு மாணவரிடம் எதுசரி,எதுதவறு என்று கேட்கும் நிலையில் நான் இல்லை. எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் ஏதாவது உருப்படியாகச் செய்யப்பாருங்கள். நன்றி.               
 Professor.Vimalan.  

Wednesday 26 November 2014

சங்கத்தமிழில் வானசாத்திரமா ? சோதிடசாத்திரமா ? 25-11-2014 # astrology # astronomy

அன்புடையீர் வணக்கம். மீண்டும் எனது blogspot ல் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் வரலாறு பற்றி ஒரு சிறிய விளக்கத்தினை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் முழுவதும் வடமொழியான ஸமஸ்கிருதமாகும். மற்ற இந்திய மொழிகளில் எந்த அளவிற்கு தொடர்புள்ளது என்று அறியமுடியவில்லை. # TAMIL ஆனால் ஒருசில தமிழர்கள் சங்கத்தமிழ் காலங்களில் வானசாத்திரம் இருந்ததாகக் கருதுகிறார்கள். அவ்வாறு ஏதும் இல்லை என்பதற்கு ஆதாரமாக இங்கு ஸமஸ்கிருதத்தில் உள்ள வானசாத்திர அறிஞர்களின் பெயர்கள், அவர்கள் எழுதி தற்பொழுது உள்ள நூல்களின் விபரங்களும் கொடுக்கப்படுகின்றன. அதேபொல் சங்கத்தமிழில் முழுமைபெற்ற வானசாத்திர நூல்கள் எழுதவில்லை என்பதற்கு விளக்கமும் அளிக்கப்படுகிறது.
சமஸ்கிருத வானசாத்திர அறிஞர்களும். நூல்களும்.
1.ஆர்யபட்டா   -கி.பி.476 ஆம் ஆண்டில் வாழ்ந்துள்ளார். இவர் ஆர்யபட்டீயம் என்ற வானசாத்திர நூலை  கி.பி.499 ல்எழுதியுள்ளார்.
2. லல்லா : கி.பி.498 ல் பிறந்துள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் என்ற வானசாத்திர நூலும், பதிகணிதம் என்ற கணித நூலையும் எழுதியுள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் நூலில் இரண்டு பிரிவுகள் உள்ளன.அவை 1.கணிதத்யாயம்.2. கோளத்யாயம்.ஆகும். இவர் முகூர்த்தம்,பிரஸ்னம்,போன்ற சோதிட நூல்களையும் இயற்றியுள்ளார்.
3.வராகமிகிரர் ;இவர் இறந்த ஆண்டு கி.பி.587 என்று குறிப்பிடுகின்றனர். பஞ்சசித்தாந்திகா என்ற வானசாத்திர நூலை இயற்றியுள்ளார். பிருகத்சாதகம். பிருகத்சம்கிதா, யோகயாத்ரா, லகுசாதகம், விவாகபடலம், பிரஸ்ன மகோதாதி, பிரஸ்னசந்திரிகா, தைவக்ஞவல்லபம், ஆகிய சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.
4.பாஸ்கரா-1. ஆர்யபட்டீயம் நூலை விளக்கியுள்ளார். கி.பி.600ல் பிறந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாஸ்கரியம்,லகுபாஸ்கரியம் என்ற கிரக கணித வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். இவர் நூலை அனேக வானசாத்திர அறிஞர்கள்மேற்கோள்காட்டியுள்ளனர்.(சங்கரநாராயண,உதயதிவாகர, சூர்யதேவா.மகிபட்டா,பரமேஸ்வரா, நீலகண்டர்)
5.பிரம்ம குப்தா- கி.பி.600ல் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவர் பிரம்ம ஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாக என்ற இரண்டு வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். ஒன்றை கி.பி.630லும்,மற்றொன்றை கி.பி.665லும் எழுதியுள்ளார்.
6.சங்கர நாராயண- கி.பி.869ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். லகுபாஸ்கரியம் வானசாத்திர நூலிற்கு விளக்கம் எழுதியுள்ளார். கேரளாவில் கொல்லத்தில் பிறந்த இவர் மகோதயபுரம் தலைநகர், குலசேகரத்தில் அரசர் ரவிவர்மாவின் வானசாத்திரம்,சோதிடவியல் ஆலோசகராக இருந்துள்ளார். கோளரங்கத்தை ஏற்படுத்தியும் உள்ளார்.
7.வதேஸ்வரா- கி.பி.880ல் பிறந்துள்ளார். கி.பி.904ல் வதேஸ்வர சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். சூர்யசித்தாந்தம் (ஸிஸ்யாதி விருத்திதம்) பிரம்மஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாயம், நூல்களை ஆராய்ந்து கருத்துக்களை தனது நூலில் பதிந்துள்ளார்.
8.மஞ்ஜாலா- லகுமானஸம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் மத்யமதிகாரம், ஸ்பஸ்டமதிகாரம், தித்யாதிகாரம், திரிபிரஸ்னதிகாரம். கிரகயுத்த அதிகாரம்,கிரகணதிகாரம், சிரிங்கோண்ணதிகாரம், என்று பிரித்து எழுதியுள்ளார்.
9.பிர்துதகஸ்வாமி- கி.பி.1040ல் வாழ்ந்துள்ளார். பிரம்மகுப்தாவின் பிரம்ம ஸ்புட சித்தாந்தத்திற்கு வியாக்யானம் எழுதியுள்ளார். அதில் கோலாத்யாயத்திற்கும்,கண்டகாத்யாயத்திற்கும் சேர்த்து 5300பாடல்களை எழுதியுள்ளார்.
10. ஆர்யபட்டா-2 :கி.பி 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். ஆர்ய சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். இதில் கோள்களின் நகர்தல், அல்ஜிப்ரா,கணிதங்கள் உள்ளன.
11. ஸிரிபதி- கி.பி.999ல் பிறந்துள்ளார். தீக்கோடிகரணம் என்ற நூலில் கிரகணகணிதங்களை விளக்கியுள்ளார். இவர் சோதிடநூல்களையும், வானசாத்திர நூல்களையும் எழுதியுள்ளார். அவை ஜாதகபத்ததி, சோதிச ரத்னமாலா, தைவக்ஞவல்லபம்,சித்தாந்தசேகரம், துருவமானசகரணம், கணிததிலகம்,பீஜகணிதம்,ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
12.போஜராஜன் –கி.பி.1000-1060,இவர் எட்டு சோதிடநூல்களை எழுதியுள்ளார். அவை வித்வஜ்னவல்லபம், இராஜமார்த்தாண்டம்,பிருகத்ராஜமார்த்தாண்டம், வியவகார சமுச்யம்,பீமபராக்ரமம்,புஜபலநிபந்தம், பூபாலசமுச்யம், அதித்ய பிரதாப சித்தாந்தம் ஆகும்.
13. தஸ பலா-அரசர்- கி.பி.1058ல் ராஜமிகாண்ககர்ணம் என்ற நூலை எழுதியுள்ளார். பல நூற்களின் கருத்துக்களை மறுத்து மேசசங்ராந்தி,திதிசுத்தி, போன்றவற்றை விளக்கியுள்ளார்.
14. பிரம்மதேவா- கி.பி.1092ல் கரணபிரகாச என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் பஞ்சாங்கத்தை தயாரிப்பதற்கான கணிதங்களுடையதாகும். ஆர்ய பட்டீயத்தை தழுவி எழுதியதாகும்.
15, சதானந்தா- கி.பி.1099ல் பாஸ்வதி என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார் இந்நூல் அனைத்து வானசாத்திர மாணவர்களுக்கும் பயன் படக்கூடியதாக உள்ளது.இந்நூல் எட்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. துருவதிகாரம், கிரகதுருவதிகாரம்,பஞ்சாங்கஸ்புடதிகாரம்.திதி பிரஸ்ன அதிகாரம், சந்திர கிரகணதிகாரம்,சூர்யகிரகணதிகாரம், பரிலக்னதிகாரம். என்பதாகும்.
16.பாஸ்கரா-2 ;கி.பி.1114-1206 –புகழ்பெற்ற சித்தாந்த சிரோன்மணி என்ற வான சாத்திர நூலை எழுதியுள்ளார். மேலும் லீலாவதி, பீஜகணிதம், கரணகுதூகலம் வஸிஸ்டதுல்யம், சர்வதோபத்ரயந்திரம், ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
17.ஸிரிதரா- கி.பி 1227ல் லகுகேசரசித்தி என்ற கோள்களின் நிலைகளைக் கூறும் நூலை எழுதியுள்ளார்.
18. பரமேஸ்வரா- கி.பி.1353ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். இவர்,திருக்கணிதம், கோளதீபிகா, வாக்யகரணம்,கிரகணமந்தனம், கிரகணநியாயதீபிகா, கிரகணாஸ்டகம், அதேபோல்,ஆசார்யசங்கிரக,ஜாதபத்ததி போன்ற சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.
20. தாமோதரன் –கி.பி.1417ல் கரணங்களைக் குறிக்கும் வானசாத்திர நூலான பாததுல்யத்தை எழுதியுள்ளார்.
21. கங்காதர- கி.பி.1434ல் சந்திரமானபீதனா என்ற 200 பாடல்கள் கொண்ட வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.
22. நீலகண்ட சோமயாஜி- கி.பி. 1443ல்கேரளாவில் பிறந்துள்ளார். கோளசரம், சித்தாந்த தர்பனா, தந்ரசங்கிரகா, கிரகணநிர்ணயா, சந்த்ரசாயகணிதம், ஆர்யபட்டீய பாஸ்யம், சுந்தர்ராஜ பிரஸ்னோத்ரம்,(வரருசியின் வாக்ய பஞ்சாங்க கணிதத்திற்குவிளக்கம்)ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.
23. கேசவ தைவக்ஞர்- கி.பி.1496ல் கிரக கௌதுகம் என்ற நூலை எழுதியுள்ளார். திதிசித்தி, வர்ஸகிரகசித்தி, ஜாதகபத்ததி. தாஜகபத்ததி,முகூர்த்த தத்துவம், கணிததீபிகா, சித்தாதவாஸச பாடகம், காயஸ்ததி,தர்மபத்ததி,குண்டஸ்டகபடலம்.போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
24. சித்ரபானு- கி.பி.1475-1550ல் வாழ்ந்துள்ளார். தனது 55 ஆவது வயதில் கரணாமிர்தம் என்ற நூலை எழுதியுள்ளார். இது பரமேஸ்வரரின் திருக்கணித முரை பஞ்சாங்கத்திற்குரிய நூலாகும். 4 அத்தியாத்தில் 134 பாடல்கள் கொண்டதாகும்.
25. மகரந்தம்- வாரணாசியில் வாழ்ந்துள்ளார். கி.பி.1478ல் மகரந்தசாரணி என்ற  வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.
26. கணேச தைவக்ஞர்- கி.பி.1490ல் பிறந்துள்ளார். இவருடைய கிரகலாகவ நூல் 1520 லெழுதப்பட்டதாகும். சித்தாந்தசிரோன்மணிதீகா,தர்ஜனியந்திரம் மற்ற வானசாத்திரநூல்களாகும்.
27. சூர்யதாஸ- கி.பி.1505ல் சித்தாந்தசுந்தரம், பீஜகணிதம், லீலாவதிதீகா, ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.  
மேலே கூறியவர்களைப்போல், விஸ்வநாதா,ஆனந்ததைவக்ஞர்-2,ரங்கனாதர், கிருஸ்ணதைவக்ஞர்( மாமன்னர் ஜஹாங்கீர் அரண்மனைச் வானசாத்திரி, சோதிடரும் ஆவார்,கி.பி-1605-1627 வரை),கோவிந்தர்,நரசிம்மர் முனீச்வரா, கமலாகரா,மணிரமா பொன்ற பல வானசாத்திர அறிஞர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் எழுதிய வானசாத்திர நூல்கள், சோதிடசாத்திர நூல்களனைத்தும் இப்பொழுதும்கிடைக்கின்றன.இவைஸமஸ்கிருதகல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்.ஆராய்ச்சி அமைப்புகளில் காணலாம்.ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களும் உள்ளன. சென்னை அடையாறு அன்னிபெசண்ட் தியாசபிகல் நூலகத்திலும் காணலாம்.
நான் வடமொழி வானசாத்திர நூல்கள் மற்றும் சோதிடசாத்திர அறிஞர்களை கி.பி 500லிருந்து. கி.பி.1600 வரைக்கும் பட்டியல் போட்டு விளக்கியுள்ளேன். இன்னமும் விளக்கலாம்.
இதே போல் சங்கத் தமிழர்களின் வானசாத்திர நூல்களையும், சோதிடசாத்திர நூல்களையும் பட்டியல் போட முடியாது. ஒரு நூல் கூடகிடையாது என்பது தான் உண்மையாகும்.
சங்ககால தமிழ் வானசாத்திர நூல்கள் இன்றுவரைக் கண்டுபிடிக்கப் படவில்லை.சோதிட நூலும் இல்லை.
ஒருசில தமிழறிஞர்கள இலக்கியத்தில் சோதிடம்,காலக்கணிதம் என்றெல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சங்ககாலப்பாடல்களில் நட்சத்திரம், திதி, நேரக்கணிதம்,முகூர்த்தநேரம் போன்ற சாதாரண செய்திகளைத்தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவற்றைக் கொண்டு பஞ்சாங்கம் கணிப்பதற்காண எந்த ஒரு கணிதமும் கிடையாது. சாதகக் கட்டமும் போடமுடியாது.தமிழுக்கு முழுமைபெற்ற வானசாத்திரத்தைக் கணிக்கும் நூல் ஒன்று கூட காணக்கிடைக்க வில்லை என்பது வருத்தமான செய்தியாகவுள்ளது. வானசாத்திரமே இல்லாத பொழுது அதை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் சோதிட சாத்திரநூல் எவ்வாறு உருவாகியிருக்கமுடியும். எனவே சங்ககாலதமிழ் முழுமை பெற்ற வானசாத்திர நூல்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. ( இன்னும் சொல்லப்போனால். நம்மவர் தமிழாண்டு என்று கூறுகின்றனரே அவை தமிழல்ல. பிரபவ,விபவ,சுக்கில,பிரமோதூத, போன்ற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத ஆண்டுப்பெயர்களாகும். தமிழில் ஒரு ஆண்டுப்பெயர்கூட கிடையாது.) ஆனால் தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் போல் உலகப்பொதுமறை எந்த மொழியிலும் கிடையாது.
மிக்க நன்றி.நன்றி.நன்றி.                     பேராசிரியர். விமலன். 
                                                            25-11-2014





  

Saturday 1 November 2014

புனித இந்து சமய வேதங்களில் உள்ள சோதிடம். 01-11-2014

பெருமைமிகு போடினாயக்கனூர் சோதிடப் பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் வினாவிற்கான பதில் பலரும் அறிய வேண்டிய ஒன்றாகும். அதன் பொருட்டு இங்கு விளக்கப்படுகிறது. ஏனெனில் முதுநிலை பாடத்திட்டதில் சிறிது அறிந்து இருப்பீர்கள்.






நாள்,அர்த்தமாஸம்,மாஸம், ருது, வர்ஸம்.இவற்றின் பகுப்பை பற்றியும், சூர்ய,சந்திரரின் நிலையால் நிகழும் அமாவாஸ்யை,பூர்ணிமை இவற்றைபற்றியும்,அப்போது நிகழும் கிரகணங்களைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் கூறும் நூல் சோதிஸம் ஆகும். இவையெல்லாம் யசூர் வேதம் முதலிய வேதங்களிலே கூறப்பட்டன. ஆனால் தற்பொழுது அவற்றைப்பற்றி விரிவாகக் கூறும்  நூல்கள் பிற்காலத்தனவே ஆகும் என்று குறிபிட்டுள்ளார்
வடமொழிப்பேராசிரியரின் கூற்றிலேயே நமக்கு தெளிவாக விளங்குகிறது வேதங்களில் கூறப்பட்டது வானசாத்திரம் என்று. வேதத்தில் உள்ள சோதிஸம் வானசாத்திரமாகும். எதிர்காலப்பலன்கள் கூறும் நம்முடைய சோதிடக்கருத்துக்கள் ஒன்றுமில்லை. சரிதான் சோதிடக்கருத்துக்கள் தான் இல்லை, வானசாத்திரம் இருக்கிறதே அவை பயன்படும் அல்லவா என்றால் அதுவும் இல்லை. அங்குள்ள வான சாத்திரம் நமது சாதகம் கணிப்பதற்கு பயன்படாது.கோள்கள் நிலை,பாவகநிலை போன்றதைக் கணிக்கும் எவ்வித கணிதங்களும் இல்லை.  நாம்தான் வானசாத்திரத்தை குறிக்கும் சோதிஸத்தை , நமது எதிர்காலப்பலன்கள் கூறும் சாத்திரத்திற்கும் வைத்துக்கொண்டோம். எனவே வேதங்களில் எதிர்காலப் பலனகளைக்கூறும் சோதிடசாத்திரம் இல்லை. 
பலன்களை ஆய்வு செய்து புதியவிதிகளை ஏற்படுத்துங்கள். அதுவே எதிர்கால சோதிடத்துறைக்கு ஏற்றதாகும். உங்களது பெயர்களும் நிலைத்து நிற்கும். எந்தமுறை சரியானது,எந்தமுறை தவறானது என்று வாதம் தேவையில்லை. இந்த பிரச்சனையே ஆய்வினால் ஏற்படுவதாகும்.
அனைத்து நிலைகளிலும் ஆய்வுகளைச் செய்து முன்னேற்றமடையுங்கள்.
எனது கருத்து சரியானது என்று வாதிடாதீர்கள். உங்களது கருத்து மறுக்கப்பட்டாலே சோதிடத்துறை வளர்ச்சியுறும். கே.எஸ்.கே.அவர்கள் ஒரு போதும் எனது கருத்து முழுவதும் சரியானது என்றுகூறவில்லை. அனைவரும் ஆய்வு செய்யுங்கள் என்று கூறிச்சென்றுள்ளார். எங்களது முறையே சரியானது என்று கூறுவது அவரவர்களின் கருத்துக்களாகும்.  இதைப்பற்றிகவலை கொள்ளத்தேவையில்லை.
 முற்றுப்பெற்ற முடிவுகளை கே.எஸ்.கே.அவர்கள் கூறியிருந்தால் நாம் அனைவருமே அதை தொடர்ந்திருப்போம்.அப்படி இல்லை. 
அதனால் உங்களது அனுபவத்தை பொது சபையில் கூறுங்கள் .அப்பொழுது தான் எங்கேயெல்லாம் உங்களது கருத்து மாறுபடுகிறது என்று அறிந்து புதிய விதிகளை ஏற்படுத்தும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். மறுத்துக் கருத்துக் கூறுபவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களது ஆய்வு அறிவைத்தூண்டுகிறார்கள்.  மட்டம் தட்டுபவர்களை புறந்தள்ளுங்கள்.பதில் கூறி அவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கே.எஸ்.கே அவர்கள் ஆன்மீகத்தை ஆய்வு செய்யவில்லை. பலன் கூறும் சோதிட அறிவியலை ஆய்வு செய்தார். சில விதிகளைக் கொடுத்துள்ளார்.அதனால் இன்று நம்மிடம் பேசப்படுகிறார். 

நான் கூறியகருத்துக்களை,மறுத்துக்கூறியதைஏற்றுக்கொண்டதாலேயே இவ்வளவு செய்திகள் பொது மக்களுக்கு கிடைத்துள்ளன. (எந்த ஒரு சிரமமும் இல்லாமல்) நமது செயல்கள் அனைத்துமே மற்றவர்களுக்காகவே.  அனைத்தும் மாற்றம் என்ற விதியில் மாறுதலுக்குள்ளாகும். இதை உணர்ந்து செயல் படுவோம்.

உங்களாலும் முடியும். இந்த உலகில் உங்கள் பெயரை பதிவு செய்ய. 
அன்புடன் பேராசிரியர்.விமலன்.  01-11-2014.

கீழே உள்ள பைலை கிளிக் செய்து வேதாங்கசோதிடத்தில் உள்ள குறிப்புக்களைக் காண்க.

https://drive.google.com/file/d/0B0pMQYkVx5DNSzVWSW9pMm03TWs/view?usp=sharing

Friday 31 October 2014

ஆன்மீகத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியாது. ஆனால் சோதிடத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியும்.


மதிப்பிற்குரிய சோதிடப் பெரியோர் போடிநாயக்கனூர் திரு.பாஸ்கரன் அவர்களுக்குவணக்கம்.சோதிடவிதிகளைக்கொண்டுஆன்மீகப்பரிகாரங்களை ஆய்வு செய்யமுடியுமா?
ஆய்வுகளின் அடிப்படை விதி ஏன்,எதற்கு,எப்படி? என்ற வினாக்களாகும். இவற்றில் எந்த ஒரு வினாவிற்கும் ஆன்மீகத்தினால் பதில் கொடுக்க முடியாது.
புனிதமானஆன்மீகச்சமயங்கள்மூலநூல்களினால்கட்டப்பட்டதாகும்.யூதர்களின்-பழையஏற்பாடு / இந்துக்களின் –நான்குவேதங்கள் /சமணர்களின் – கல்பசூத்ரா,/ பெளத்தர்களின் –தீப்திகா,வைரசூத்திரம்/ பார்சிகளின் –அவெஸ்தா /கிறித்துவர்களின்-திருவிவிலியம்,/இசுலாத்தியர்களின் –அல்குரான்,அல்ஹதீஸ்,சைவர்களின்பன்னிருதிருமுறைகள்,சிவஞானபோதம்/வைணவர்களின் –நாலாயிரதிவ்யபிரபந்தம்.திருப்பாவை,/சீக்கியர்களின் ஆதிகிரந்தசாகிப். போன்றவையாகும். இவற்றில் எவ்விதமாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்நூல்களில் உள்ளகருத்துக்கள் அனைத்தும் எம்பெருமான் இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்டவையாகும்.அனைத்தும் புனித நூல்களாகும்.அவற்றில் உள்ளகருத்துக்களின்படி வாழவேண்டும். மாறிசெயல்பட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாகவேண்டும்.எனவே நூலின் கருத்துக்களை மாற்றமுடியாது. இங்கு ஏன்,எதற்கு,எப்படி என்ற வினாவிற்கு வழியில்லை. எனவே மாற்றதிற்கு வழிவகுக்கும் அறிவியல் ஆய்விற்கு ஆன்மீகத்தில் இடமில்லை. ஆன்மீகப்பரிகாரத்திலும் இடமில்லை.
சோதிட ஆய்வு ; சோதிடத்தை ஆய்வு செய்யமுடியும். ஏனெனில் இங்கு ஆன்மீகம் என்ற அடிப்படை இல்லை. ஆதலால் சோதிடநூல்களில் கூறியுள்ள எந்த ஒருகருத்தையும் ஆய்விற்கு உட்படுத்தலாம்.எந்த ஒரு இறைவனும் நமக்கு தண்டனை அளிக்கமாட்டார்.எனவே சோதிடம் ஆய்விற்குட்பட்டதாகும்.இக்கலை,பகுதியானஅறிவியலா,அல்லதுமுழுமையான அறிவியாலா என்று நாம் அனைவரும் ஆய்வு செய்து உலகினர்க்கு தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளோம். கே.எஸ்.கே அவர்கள் சோதிடத்தை ஆய்வு செய்து சில முடிவுகளை கொடுத்துள்ளார். அந்த முறையில் பலன் கூறும் பொழுது ஏற்படும் சிக்கல்களை, அம்முறையை பயன்படுத்துபவர்கள் ஆய்வு செய்யவேண்டும். அதேபோல் பாரம்பரிய சோதிடப்பலன்கள் கூறும் நூல்களில் உள்ள கருத்துக்களை பல்வேறு விதிகளை ஏற்படுத்தி சாதகங்களில் எவ்வாறு செயல்படுகிறதுஎன்று ஆய்வு செய்யவேண்டும்.
சோதிடம் இல்லாமல் ஆன்மீகம் வளரமுடியும்.
அதேபோல் ஆன்மீகம் இல்லாமல் சோதிடமும் வளர முடியும். நன்றி.

Professor.Dr.Vimalan.

Tuesday 28 October 2014

தனித்தன்மையான ஆலயப்பரிகாரங்கள் சோதிடவியலில் இல்லை.

மதிபிற்குரிய போடிநாயக்கனூர் சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள். ஆலயப் பரிகாரத்திற்கான சுருக்கமான பதில்.
ஆலயப் பரிகாரம்: தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மூன்று பிரிவுகளில் காணப்படுகின்றன. அவை இனக்குழு வழிபாட்டுச் சமயத்தைக்குறிக்கும் குலதெய்வஆலயங்கள்.2.சைவத்திருத்தலஆலயங்கள்.3.வைணவத்திருத்தல ஆலயங்கள் என்றுள்ளன. இவை மூன்றிற்கும் பொதுவாக வேள்வி வழிபாடு செய்யும் இந்து சமய அமைப்பும் உள்ளன. எனவே தமிழகத்தில் நான்கு பிரிவுகளிலும் வழிபாடு செய்யும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.( பிற மதத்தினர் இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.)
ஆலயத்தின் அடிப்படைக்கோட்பாடு புனிதம்—தீட்டு என்பதாகும். இந்த விதி அனைத்து சமயத்தினருக்கும் பொதுவானதாகும்.இவ்வாறு பிரிக்கப்பட்டதில் ஆலயம், ஆலயத்திற்கு இனணயான பகுதிகள்,பஞ்சபூதங்கள்,மானுடத்தின் நற்செயல்கள் போன்றவை புனிதமானதாகவும். ஆலயத்திற்கு இணையில்லாத பகுதிகள், மானுடத்தின் தீய செயல்கள்,போன்றவை தீட்டானதாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களின் (சமயங்களின்) வேலை என்பது தீட்டை, புனிதமாக்குவதாகும். மானுடத்தின் தீயசெயல்களினால் அவர்களுக்கு தீட்டு ஏற்படுகிறது. தீட்டினால் மானுடம் பாவமடைகிறது. அவ்வாறு பாவமடைந்த மானுடத்தை பாவத்திலிருந்து விடுபடும் (பாவமன்னிப்பு) வழியாக ஆலயவழிபாட்டிற்கு உட்படுத்தி புனித நீர்களை தெளித்து, பாவமற்ற புனிதராக்குவதே ஆலயவழிபாடாகும். புனித நீர் தவிர்த்து, ஆலயத்தில் இறைவனுக்குப் படைக்கப்படும் பலி பொருட்களும் புனிதப்பொருட்களாகும். இவற்றை மானுடம் ஏற்றுக்கொண்டால் அவர்புனிதர் ஆவார்.
1.குலதெய்வ வழிபாட்டில் ஆடு,கோழி போன்றவை பலியிடப்பட்டு அவற்றை இறைவனுக்குப் படைக்கின்றனர். பின்னர் படைக்கப்பட்ட பொருளை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கையில்,மக்கள் அனைவரும் அப்பலி பொருளை உண்டு மகிழ்ந்து பாவத்தை நீக்கிக்கொள்வர். ஒருசில குலதெய்வ ஆலயங்களில் சைவப்பொருள்களையும் படைத்து வழிபடுகின்றனர்.
2.புனித இந்து சமய வேதங்களான இருக்கு,யசூர்,சாம,அதர்வங்களில் கூறியுள்ளபடிவேள்விஇயற்றும்மந்திரங்களும்,இறைவணக்கங்களும்,பலியிடுதலும் போன்ற சடங்குகள் நிகழ்த்தப்பட்டு பலிபொருளை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் தாங்களும் உண்டு மகிழ்ந்து பாவத்தை நீக்கி புனிதராவர்.
3.புனித சைவத்திருத்தல ஆலயங்களில் பன்னிருதிருமுறைகள்,சைவ சாத்திரம்,ஆகமம், வழிபாட்டு நூல்களில் கூறியுள்ளபடி இறைவழிபாடுகள் செய்யப்பட்டு புனிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை மானுடம் ஏற்றுக்கொண்டால் பாவங்கள் நீங்கி புனிதராவர்.
4.வைணவத்திருத்தல ஆலயங்களில்,இச்சமயத்திற்குரிய ஆகமம்,வழிபாடு, சாத்திரம்,தத்துவங்களின்படி இறைவழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஆலயங்களிலும் அனைத்து பாவமுள்ள மானுடத்திற்கும் புனிதப்பொருள்களைக் கொடுத்து அவர்களை புனிதராக்குகின்றனர்.
இந்த ஆலயங்கள் அனைத்தும் தமது பிரிவிற்கு தகுந்தாற்போல் இறை பிரசாதப்பொருள்களை மானுடத்திற்கு வழங்குகின்றன. இவற்றிற்கு விலையேதும்இல்லை.(தீர்த்தம்,திருநீறு,குங்குமம்,சந்தணம்,பிரசாதங்கள்,படையல் பொருட்கள்) இவற்றை ஏற்றுக்கொண்டாலே செய்த பாவமெல்லாம் போய்விடும் எனும்பொழுது எதற்காக பணத்தை செலவழித்து சாந்தி பரிகாரச்சடங்குகளை நடத்தவேண்டும்.
ஆலய வழிபாடுஎன்பது பொதுவாக இருக்கும் பொழுது, சிறப்பு தெய்வவழிபாடு என்பது எதற்கு? அனைத்து ஆலயங்களிலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பார்தானே! சோதிடத்தில் ஒவ்வொரு தோசமாகச்சொல்லி அந்தகோயிலுக்குசென்றால் பரிகாரம் ஆகிவிடும் என்று எப்படிச்சொல்லமுடியும்.உண்மையில் உங்கள் ஊரில் உள்ள இறைவனை நம்பாமல் வேறு ஒரு ஊருக்கு அனுப்புவது எப்படிச்சரியாகும். (நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எந்த ஊருக்கும் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.  அவரவர் ஊர்க்கோயிலில் தான் வழிபட்டு இருப்பர்.)
பாவமன்னிப்பு,பரிகாரம் என்பதெல்லாம் இறை நம்பிக்கையில் செய்யப்படும் செயலாகும்.நடந்தாலும்,நடக்காவிட்டாலும் மக்கள் கவலைப்படாமல் திரும்பவும் ஆலயங்களுக்கு போய்கொண்டுதான் இருப்பர். எனவே சாதாரண வழிபாட்டிலேயே பாவபரிகாரம் அடையும் மானுடத்தை, சோதிடவியல் தோசங்களை பெரிதாகக்கூறி மக்களிடம் ஏன் பணத்தைப் பிடுங்கவேண்டும். எனவேசோதிடத்தின் கோள்களின் அடிப்படையில் ஆலயவழிபாடு செய்விப்பதெல்லாம் மக்களை திசை திருப்பும் வேலையே. ஆலயவழிபாடு என்பது மானுடத்தின் பொதுக்கடமையாகும். குறிப்பிட்ட தோசபரிகாரம் என்பதெல்லாம் கோயில்களில் கிடையாது. அனைத்தும் இந்து,சைவம்.வைணவம்.குலதெய்வக் கடவுள்களாகும். இவற்றில் முதன்மைக்கடவுளாக அச்சமயத்தின் முதற்கடவுளே இருப்பர். ஆதலால் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அவரவர் விதிப்படியே நடைபெறும்.விதியை வாசிப்பதே சோதிடக்கலையாகும்.மாற்றுவது அல்ல. மற்றவை நூலில்.


Monday 27 October 2014

சோதிடம் ஆன்மீகம் சார்ந்தது அல்ல. அறிவியல் சார்ந்ததாகும்.

பேரன்புடைய சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு ,உங்கள் பேராசிரியர் விமலன் அளிக்கும் சுருக்கமான பதில்கள்.
வினா எண்கள்: 3,4-ஆலயப் பரிகாரங்கள் செய்வதால் தனிநபர் சோதிடப்பலன்கள் மாற்றம் ஏற்படுமா ? ஆலயப்பரிகாரம் என்பது என்ன அவற்றை எவ்வாறு கண்டு கொள்வது?
      இந்த இரண்டு வினாக்களும் ஒரே செய்தியை விழிப்பதால் அதற்குரிய பதில்கள் இணைத்தே கொடுக்கப்படுகின்றன. முதலில் சோதிடம் ஆன்மீகமா ? அல்லது அறிவியலா? என்பதில் விளக்கம் பெற்று பின்னர் பதிலுக்கு வருவோம்.
ஆன்மீகம் : மெய்பொருளைத்தேடும் அமைப்பாகும். இதற்கு காட்சி பொருள் என்று ஒன்று தேவையில்லை. நாமாக பல்வேறு உருவக அமைப்பைக் கொண்டு வழிபட்டாலும் முடிவில் பிரபஞ்சம் ஈஸ்வர சொருபம் என்று முடித்து விடுவோம். இருட்டான அறைக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல் உள்ளது மெய்ப்பொருள் என்று கூறுவதும் உண்டு. அதன்படி சிலர் மெய்ப்பொருளை அறிந்தேன் என்பார்கள், சிலர் அறிய முயல்கிறேன் என்பார்கள். இவை அனைத்தும் அவரவர் அனுபவத்தை ஒத்ததாகும். தான் கண்ட காட்சியையோ,அனுபவத்தையோ அடுத்தவருக்கு காட்டமுடியாது. ஒன்றைகண்கொண்டுபார்க்காமலேஅனுமானித்துசெயல்படுவது
(வழிபடுவது) ஆன்மீகமாகும்.
சோதிடவியல் : வான சாத்திரம் பிரபஞ்ச ஆய்வுகள் செய்து பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மானுட வாழ்விற்கு மையமாகத் திகழ்கிறது.  அதைப்போலவே அறிவியலின் முன்னோடியான வானச் சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மானுடவியலிற்கு எதிர்காலப்பலகளைக் கூறுவது சோதிடவியலாகும்.  வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் ,கோள்களையும், இராசி மண்டலங்களையும் நாம் காட்டமுடியும்.அதன் நகர்ச்சிகளுக்குத்தகுந்தவாறு பலன்களை எடுத்துக்கூற முடியும். நமது சோதிடத்தில் பல்வேறு கணித அமைப்புகள் உண்டு. அதைக்கொண்டு கணித்து எதிர்காலப்பலன்களக்கூறும் அமைப்பாக சோதிடக்கலை உள்ளது. வானசாத்திரமும், கணிதமும் அறிவியல் சார்ந்ததாகும்.  ஒன்றைப்பார்த்து அனுமானித்து செயல்படுவது அறிவியலாகும். ஒன்றை பார்க்காமல் அனுமானித்து செயல்படுவது ஆன்மீகமாகும். எனவே  வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும்,கோள்களையும் பார்த்து அனுமானித்து சரியான எதிர்காலப்பலன்களைக் கூறுவதால் நமது சோதிடவியல் அறிவியல் சார்ந்த கலையாகும். சோதிடப்பலன்கள் கூறுவதற்கு ஆன்மீகத்தின் பங்கு ஒன்றும் இல்லை. (பரிகாரச் செயல்கள் வரும் பொழுதே ஆன்மிகம் உள்ளே வருகிறது.) மற்றபடி ஆன்மீகத்திற்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையே.