Sunday 8 February 2015

சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...



சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன்.
கோ.ஜெ.பத்ரி நாராயணன்.
”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால மானுடம் கண்டுபிடித்ததே இறைவனும், அதற்குரிய கோட்பாடுகளும் ஆகும். இந்த இறைக் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டதாலேயே மானுட வாழ்வு நாகரீகமானதாக உருவெடுத்துள்ளது. அந் நாகரீகத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடம் பல்வேறு நம்பிக்கைகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது.. அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கைகளில் ஒன்றுதான் சோதிடம் பார்ப்பதாகும். சோதிடத்தின் மூலமாக தங்களது எதிர்காலத்தை அறிந்து அதன்படி வாழ்க்கையை நடத்திக் கொண்டு பல மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோதிடப் பலன்கள் விண்ணில் உள்ள கோள்களையும்,விண்மீன்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே இக்கலைக்கு அடிப்படையாக வானசாத்திரம் உள்ளது. இந்த வானசாத்திரம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதால், சோதிடம் அறிவியலாகிறது. எப்பொழுது சோதிடம் அறிவியலைச் சார்ந்துள்ளதோ அப்பொழுதே இங்கு ஆன்மீகத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. ஆதலால் ஆன்மீகம் வேறு, சோதிடம் வேறு என்ற கோட்பாடுடையவனாகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு எனது முடிவை நனவாக்கிய பெருமையுடையவர் ஒருவர் உண்டென்றால் அவரே தமிழகத்தின் முதல் சோதிடவியல் துறைப் பேராசிரியர் முனைவர் தி. விமலன் அவர்கள் ஆவார்கள். “
முனைவர் தி.விமலன் அவர்கள் கி.பி. 1962 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 10 ஆம் நாள் காலை 05 மணி 55 நிமிடங்களுக்கு மதுரையில் பிறந்துள்ளார். இளமைக்காலங்களில் பள்ளிப்படிப்பை முடித்தவர் ,அதன் பின்னர் மதுரை காமராசர் பல்கலையில் சோதிடவியல் பட்டயப்படிப்பும், வடமொழி சான்றிதழ் படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் படித்தார். பின்னர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2000ஆம் ஆண்டில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.. வால்மீகி இராமாயணத்தில் சோதிடவியலின் கோட்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2006ல் முனைவர் பட்டம்பெற்றுள்ளார்.
சிறு வயதிலிருந்தே சோதிடத்தைப் பற்றிய நூல்களை வாசிப்பதிலும், அவற்றின் பலன் கூறும் அமைப்புகளையும் நன்கு அறிந்து தன்னை முழு நேர சோதிடராக மாற்றியுள்ளார். மதுரை மாநகரத்தில் சோதிட அலுவலகம் அமைத்து பலன்கள் கூறிக் கொண்டிருந்த வேலையில் திருமணம் ஆனது. பின்னர் 1993ல் மதுரை காமராசர் பல்கலையில் தொலை தூர அஞ்சல் வழியில் தொடங்கப்பட்ட சோதிடவியல் பட்டயக்கல்வியில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அதே பல்கலையில் சோதிடவியல் பட்டயக்கல்வி பாடத்திட்டதிற்கு ஏழாண்டுகள் வகுப்பும் எடுத்துள்ளார்.. மதுரை பல்கலையில் சோதிடவியல் துறை என்று ஒன்று இல்லாதது பெரும் குறையாக கூறிக்கொண்டிருப்பார்.. ஏனெனில் சோதிடவியல் பட்டயக் கல்வியுடன் நின்று போய்விட்டது.. ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை…
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

கி.பி 2002 ஆம் ஆண்டில் இந்திய சோதிடவியல் வரலாற்றில் மாற்றம் ஏற்பட்ட ஆண்டு எனலாம். இந்திய பல்கலைக் கழக மாணியக்குழு முதன் முதலில் 2001ல் வெளியிட்ட ஆணையில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், சோதிடவியல் துறையை ஏற்படுத்தி சான்றிதழ் படிப்பு முதல் முனைவர் பட்ட படிப்பு வரை தொடங்கலாம் என்றது. { இதற்கு முன்னர் நடை பெற்ற எந்த சோதிட படிப்புகளும் தோதிடவியல் துறையினரால் நடத்தப்படவில்லை.} அதன்படி 2002ல் தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தின் முதல் சோதிடவியல் துறை தொடங்கப்பட்டது. அதேபோல் அதில் முனைவர் தி. விமலன் அவர்கள் சோதிடவியல் துறையின் தலைவராகவும், விரிவுரையாளராகவும் பணியில் அமர்த்தப்பட்டார். இதுவே தமிழக சோதிடவியல் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.
2002ல் முனைவர்,தி.விமலன் அவர்கள் சோதிடவியல் கல்வியில் பட்டயப்படிப்பும், இளங்கலை பட்டப்படிப்பும் கொண்டு வந்தார்.. இதுவே அங்கீகரிக்கப்பட்ட உலகப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இளங்கலைப் பட்டப்படிப்பாகும். இந்த இளங்கலைப்பட்ட படிப்பை விமலன் அவர்கள் தொடங்கியதனால் இந்திய சோதிடவியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய பெருமைக்கு உள்ளானார்.
இளங்கலை பட்டப்படிப்பு

இவர் கொண்டு வந்த இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பில் ஆண்டிற்கு நான்கு பாடங்கள் என்று பன்னிரெண்டு பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆங்கில மொழிப்பாடம் நீங்கலாக பதினொரு பாடங்களுக்கு பாட நூல்களை எழுதியது விமலன் அவர்களே ஆகும்.
1. அடிப்படைசோதிடவியல் ;இராசிகள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தன்மைகள், பஞ்சாங்கம், முகூர்த்தம், தியாஜ்ஜியம் போன்றவற்றின் விளக்கங்கள், யுரேனஸ், நெப்ட்யூன், சோதிடரின் நெறிமுறைகள் கொண்டதாகும்.
2. சாதக கணித முறைகள் ; விண்மண்டல விளக்கம், அட்ச,தீர்க்க ரேகைகள், மணிகள், அயனாம்சம், தசவர்க்கம்,சட்பலம்,அஸ்டவர்க்கம்,வாக்யமுறைப்படி சாதகம் கணித்தல், திருக்கணிதம், எபிமெரிஸ்படி சாதகம் கணித்தல் ஆகும்.
3. பிருகத்சாதகம்;இராசி,கிரகம்,இராசயோகம்,நாபசயோகம்,சந்திரயோகம்,பிரவிரச்யா யோகம்,கர்மசீலம்,துவாகிரகம்,ரிகசசீலம்,திருஸ்டிபலம்,அரிஸ்டம்,ஸ்திரிஜாதகம், திரேகாணம், நைர்யாணி அத்யாயம், போன்றவை பாடங்களாகும்.
4. சாராவளி : கோள்கள்,இராசிகள். கூட்டுக்கோள்களின் பலன்கள்,ஒவ்வொரு கோள்களும் இராசியில் நிற்கும் பலன்கள்,பார்வைப் பலன்கள், அரசயோகங்கள், தீங்கு நிலைகள், பன்னிருபாவகத்தில் கோள்களிருப்பதினால் ஏற்படும் பலன்கள்.
5. பராசர ஹோரா சாஸ்த்ரா ; பாவங்களில் கோள்கள் ஏற்படுத்தும் தன்மைகள், பாவக்கோள்களினால் ஏற்படும் அரசயோகத்தன்மைகள்,செல்வயோகங்கள், பாவாதி பதிகள் மாறியிருப்பதால் ஏற்படும் பலன்கள்,புத்திர தோசங்கள், மாரகம், ஏழ்மை, பஞ்சமகாபுருசயோகம்,கோள்களுக்குரிய நோய்கள், தசாப் பலன்கள், காரகாம்சம்.
6. உத்ரகாலாமிர்தம்; பாவகம்,கோள்களின் காரகங்கள்.ஆயுள்கணித விளக்கங்கள், பிரசன்னசோதிடம்,சட்பலம்,பாவகக் கோள்களின் பலன்கள்,பார்வைபலன்,செல்வந்தர் யோகங்கள்,தீயபாவகங்கள், யோகர்,மாரகர்,தீயவர், இராகு,கேதுக்களின் பலன்கள்.
7. சமயமும்-தத்துவமும்; இனக்குழு சமயம்,நிறுவனச்சமயங்கள்,இந்து,கிறித்துவம், இசுலாம்,சமணம்,பௌத்தம்,சீக்கியம், ஆகிய சமயங்களின் கோட்பாடுகள், பகுத்தறிவு தத்துவம், சிக்மண்ட் ப்ராய்டு,சமயச்சிந்தனையாளர்களின் கருத்துக்கள்.
8.முக்கியமான யோகங்கள்; செல்வயோகங்கள், ஒவ்வொரு பாவகத்தின் தொடர்பு யோகங்கள், தீயயோகங்களின் விளக்கங்கள், பெயருடன் கூடிய யோகங்களின் விளக்கங்கள், பாவாதிபதி இணைவுகளினால் ஏற்படும் யோகங்களின் விளக்கங்கள்.
9.சாதகப் பலன்களை வரையறுத்தல்; இலக்னப்பலன்கள்,பன்னிருபாவகத்திலும் கோள்கள் இருக்கும்பலன்கள்,சேர்க்கைப்பலன்கள், விம்சோத்தரிதசாப்பலன்கள், திருமணப்பொருத்தவிளக்கம், பத்துபொருத்த அமைப்புகள், பலன்கள்.
10.நவீன கால சோதிட வளர்ச்சி; கிருட்டிணமூர்த்தி முறையின் கோட்பாடுகள், இராசிகள்,கோள்கள் தன்மைகள்,இராசிகளுக்குரிய உபநட்சத்திரப் பிரிவுகளின் பலன்கள், பன்னிருபாவ உபநட்சத்திர அதிபதிகள் மற்ற பாவக அதிகாரப் பலன்கள்.
11.சாதக பகுப்பாய்வு; பன்னிரு இலக்ன சாதகங்களின் பலன்கள் கூறும் அமைப்பு. ஒவ்வொரு சாதகத்திற்கும்.,இலக்னம்,கோள்கள் நின்றபாவகம்,கோள்கள் மாறி நின்ற பாவகம், சேர்க்கை,தசா,புத்தி, செல்வயோகம்,அவயோகம் பொன்ற பலன்கள்.
இப்பாடங்கள் அனைத்தும் தொலைதூரக் கல்வி முறையில் நடந்ததாகும். முதல் மூன்றாண்டுகள் அனைத்துப் பாடங்களையும் பேராசிரியர் விமலன் ஒருவர் மட்டுமே நடத்தினார். 2009ல் சாஸ்த்ராவிலிருந்து விலகி கோவை கற்பகம் பல்கலையில் சேர்ந்தார்.
கற்பகம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம்;
2009 ல் கோவை கற்பகம் பல்கலையில் சோதிடவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குனாராகப் பணியில் அமர்த்தப்பட்டார். இங்கு தான் உலகின் முதன் முதல் சோதிடவியலில் அறிவியல் பட்டப்படிப்பை தொடங்கினார். இளநிலை,முதுநிலை மற்றும் பயன்பாட்டு முதுநிலை என்ற அறிவியல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்தினார். அவை அனைத்திற்கும் பாடநூல்களை எழுதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற வழி ஏற்படுத்தினார்..
முதுநிலை அறிவியல் சோதிடப் பட்டபடிப்பு
1.சோதிடவியல் வரலாறு ; சோதிடவியலின் தோற்றம்,பாபிலோனியம்,கிரேக்கம், இந்திய சோதிடம், வானியல் வளர்ச்சி, பஞ்சாங்கம்,மேற்கத்தியம், வேதகாலம், பண்டைய சோதிடர்கள்,தமிழர்களின் சோதிடம், தற்கால சோதிடம்.
2.பிரசன்னசோதிடம்; பிரசன்ன சோதிட விதிகள், பதில் கூறும் முறைகள், சகுனம், பிரசன்ன முறயில் இராசிகள், கோள்களின் குணங்கள், கிருட்டிணமூர்த்தி முறையில் பிரசன்ன சோதிட முறைகள்,
3.நவீனகால சோதிடம்;
இராசிகள், கோள்களுக்குரிய குணங்கள், உப நட்சத்திரப்பலன்கள், பன்னிரு பாவகத் தொடர்பினால் ஏற்படும் வினாக்களுக்கு பலன் கூறும் முறைகள்.. கிருட்டிணமூர்த்தி முறையில் சாதக ஆய்வுகள்.
4.மேற்கத்திய சோதிடம்;
அடிப்படை விதிகள், சாயனமுறை, கோள்கள், இராசிகளுக்குரிய குணங்கள், ஆண், பெண், குழந்தை, முதலாளி,தொழிலாளியின் குணங்கள், கோணம், சதுரம் பார்வைப் பலன்கள், யுரேனஸ்,நெப்ட்யூன், புளூட்டோ.
5.தொழில் முனைவோர் சாதகங்கள்;
கோள்களுக்குரிய தொழில்கள், தொழிலிற்கான விதிகள், பலவேறுபட்ட வியாபாரிகள், பல்வேறு பணிகள் செய்யும் தொழிலாளர்களின் சாதகங்கள் ஆய்வுப் பலன்கள்.
6.மருத்துவ சோதிடம் ;
மருத்துவ சோதிடத்தின் அடிப்படைக் கொள்கைகள், உடற்கூறுகள், நோய்கள், தசா,புத்திகாலங்களில் ஏற்படும் நோய்களும், காற்று, நீர், நரம்பு, சம்பந்தப்பட்ட நோய்களின் கோள்கள் நிலைகள், பழைமையான சோதிட நூல்களின் கூற்றுகள்…
7.இகலோகச் சோதிடம் ;
நெருப்பு,நிலம்,காற்று,நீர் இராசிகள், கோள்கள்,நட்சத்திரங்கள், இவற்றின் பலன்கள், ஊர்கள்,நாடுகள், நாட்டிற்காக செயல்படும் விளக்கங்கள், மக்களின் பிரிவுகள், மழைக்குறி அறிதல், ஆண்டுப்பலன்கள், இயற்கைப் பேரழிவுகள்..
8.தொழில் சார்ந்த சாதகங்கள் ;
ஆசிரியர்கல் சாதகங்கள், குரு,புதனின் தொடர்பகள், மருத்துவர்கள் சாதகங்கள், கணக்காளர்கள் சாதகங்கள், வழக்கறிஞர்கள் சாதகங்கள், பொறியாளர்கள் சாதகஙள். ஆகியவற்றில் கோள்களின் தொடர்புகள்…
9. அரசுப் பணியாளர்கள், தொழிலாளர்கள் சாதகங்கள்:
அரசுத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் சாதகங்களில் கோள்களின் நிலைகளும், அதற்குரிய விதிகளும், பல்வேறு தொழில் செய்யும் சாதகங்களில் கோள்களின் செயல்பாடுகள்.
10,திட்டக் கட்டுரை (ஆய்வேடு)
ஒவ்வொரு தொழிற்பிரிவிலும் உள்ள 50 சாதகங்கள் எடுக்கப்பட்டு பத்து விதிகளைக்கொண்டு ஆய்வு செய்து முடிவு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சோதிடவியல் துறையில் ஆய்வு சிந்தனையுடன் கூடிய பாடப் பிரிவு களை எழுதி, அவற்றை ஒருவரே முழுமையாக நின்று நடத்தினார். இவருடைய பாடப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டயம், பட்டம் பெற்றுள்ளனர்.
ஆய்வியல் நிறைஞர்- முனைவர் பட்டம் ;

இருபது நபர்களுக்கு சோதிடவியல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு நெறியாளராக இருந்து பட்டம் பெற உதவியுள்ளார். எட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.
இவ்வாறு தமிழகத்தில் சோதிடவியல் துறை ஏற்படுத்தி, பட்டயம் முதல் பட்டம், முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் மற்றும் அறிவியல் சோதிடப் பாடத்தையும் ஏற்படுத்திய பெருமை முனவர் தி. விமலன் அவர்களையே சாரும்.
சமூகப் பார்வை

சோதிடவியல் துறை மட்டும் இல்லாமல், தமிழக சோதிடத்தை ஒன்றிணைக்கும் எண்ணத்தில் பட்டதாரிகள் சோதிட சங்கத்தை தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு திருச்சியில் மாவட்ட சங்கம் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் சேலம், மதுரை, திருநெல்வேலி,தஞ்சாவூர்,சென்னை,கோவை ஆகிய ஊர்களிலும் மாவட்ட சங்கங்கள் தொடங்கினார். 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சோதிடவியல் பட்டதாரிகள் & முதுகலைப் பட்டதாரிகள் சங்கம் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு தகவல்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது.
தொடக்கத்திலிருந்து சோதிடத்தில் ஆன்மீகக் கருத்துக்களையும்,பரிகாரக் கருத்துக் களையும் மறுத்து வந்துள்ளார். சாதகத்தின் உண்மை தன்மையான தலைவிதியை வாசிக்கும் கலை என்பதில் இன்றுவரை உறுதியாக உள்ளார்.
யூ டியூப்

இணைய தளத்தில் உள்ள யூ டியூப் சேனலில் எழுபதுக்கும் அதிகமாக சோதிடவியல் சீர்திருத்தக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவை, அமாவாசையில் நல்ல நிகழ்ச்சிகள் தொடங்கலாமா, சந்திராஸ்டமம், விலங்குகளுக்கு சோதிடம்,பிரம்ம முகூர்த்தம், அயனாம்சம், பதினாறு சடங்குகள், யோகம், நவாம்சம்-வர்க்கமேன்மை, குழந்தை பிறப்பு, நட்சத்திர தோசம், ஏழரைச் சனி, திருமணம், முகூர்த்தம், ஏழாம் பாவகம், இரட்டைகுழந்தை சோதிடம், கேந்திராதிபத்ய தோசம், ஒரேஇராசி-நட்சத்திரம் பாவகோ காரநாஸ்தி, மானுட முயற்சியை தடுக்கிறதா, கூட்டு தசா, சோதிடம் பேராசை, ஒரே பலன்களை கூறமுடியவில்லையா, அதிர்ஸ்டம், சோதிடம் தன்னை இகழ், அனைத்து மதத்தினர்க்கும், சொந்தத்தில் திருமணம், ருது சாதகம், களத்திர தோசம், சிசேரியன் குழந்தை, தோசவிளக்கம், 6,8,12,பாவக விளக்கம், சமயமா-அறிவியலா, நவாம்சபலன், மேற்கத்திய சோதிடம், மரணகாலம், வெள்ளிக்கிழமை பிறப்பு, பத்துப்பொருத்தம், யோனிப்பொருத்தம், சூரியன் –செவ்வாய் இணைவு, கற்புநிலை, திருநங்கை சாதகங்கள், ஒரே நேரப்பிறப்பு, சாதி-மதப்பிரிவுகள், தாமதத்திருமணம், இராகு-சந்திரன், கணப்பொருத்தம், சோதிட நிபுணப்பிரிவுகள், புகுந்த வீட்டுப்பெண், திதி சூன்யம், அந்திசாய்ந்த சோதிடம், சோதிடம்சரியா, மானுடப் பயன், இந்திய சோதிட வரலாறு, போன்ற தலைப்புகளில் { vimalariias – you tube } நன்கு காணலாம். இக்கருத்துக்கள் அடங்கிய video cd க்களும் வெளியிட்டுள்ளார்.
VIMALANRIIAS TRUST

விமலன் இந்திய சோதிட அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் என்று கோயமுத்தூர் வடவள்ளியில் தொடங்கி நடத்திவருகிறார். இதில் சோதிடப் பாடங்கள் நடத்துவதும், பொது மக்களுக்கு சோதிடப்பலன்கள் கூறியும் வருகிறார். சோதிடத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சியும் செய்து கொண்டிருக்கிறார். இவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்களை தனது vimalanriias.blogspot.com மூலமாக உலகினர்க்கு தெரிவித்தும் வருகிறார்.
நான் மேலே கூறிய நூல்களுடன் மேலும் பல நூல்கள் வேறு பாடப்பிரிவுகளுக்கு எழுதியுள்ளார். அவற்றை எல்லாம் கற்ற மாணவர்கள் இன்றும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இனி மேலும் அனைவரும் கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் ஏற்படும். தனது vimalanriias ஆராய்ச்சிக்கழகம் மூலமாக அனைத்துப் படிப்புகளும் கற்கின்ற வாய்ப்புகள் ஏற்படும். எங்களது அனைவரின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு இந்த ஆண்டு முதல் பழைய படி பல்கலைக் கழகத்தின் மூலம் தமிழக மக்களை சந்திக்கவுள்ளார். முக்கியமாக ஆராய்ச்சி மாணவர்கள் நன்கு பயனடைவர்….
நான் சோதிடவியல் மாணவராக சேர்ந்த பொழுது இவர் ஒரு பகுத்தறிவு சோதிடராகவே காட்சியளித்தார். அதேபோல் பாடங்கள் நடத்தும் பொழுதும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் தவிர்த்து , உண்மையான சோதிட நுணுக்கங்களை கற்பித்தார். அனைத்து மாணவர்களையும் ஒன்று போல் கருதும் நல்லாசிரியராவார். தமிழகம் சோதிடத்தில் அறிவியலும், ஆராய்ச்சியும் கொண்ட பாதையில் செல்வதற்கு வித்திட்டுள்ளார். அதற்காக இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிற பேராசிரியர் முனைவர் தி. விமலன் அவர்கள் ஒரு ”சோதிட சகாப்தம்” என்றால் அது மிகையல்ல…
அன்புடன் பேராசிரியர் அவர்களுக்கு எனது இந்த பதிவை தங்களது blogspot லும் பதியும் படி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் …. மிக்க நன்றி………
C.J. BATHRINARAYANAN. M.A., M.Sc., ( Ph.D )
TREASURER
TAMILNADU STATE ASTROLOGY GRADUATES & POST GRADUATES ASSOCIATION… COIMBATORE .